காலையில் எழுந்ததும் மழை சத்தம்
பிசிறு பிசிறாய் சன்னலின் வழியே
துளிகளாய் இலைகளிடை தங்கி
மண்ணின் மடியினிலே வீழ்ந்து சிதறி
புதிதாய் இனம் புரியா மோகத்தினை

தெளித்திடும் இக்காலை வேலையில்
பூக்கள் இல்லா மரமும்
மழைத்துளிகளை தாங்கி கொண்டு
தாய்மையின் பூரிப்புடன் நெகிழ்ந்திட

மழை தந்த ஈரத்துடன்
சாலை கருமையும் மின்னிட

ஒன்றை தான் மனது நினைக்கும்
நினைவுகளில் ஏக்கம் கூடும்
அவைகளின் அழுத்தம் ஓங்கும்
எனவே

உடனிருத்தல் வேண்டும் என்றும்
மௌன மொழி போதுமென்றும்
போர்வையில் உறைந்து கொண்டு
புருவ அசைவே காதல் சொல்ல
தருணங்கள் தளிர் நடனம் புரிய

மழை வரும் காலை காதலும் தரும்
என்றாய் என் மனம் அங்கலாய்க்க

ஓர் சந்தேக மெனக்கு

மண் விழுந்து கிளறி உள் நுழைந்து
வெளிவரும் வாசனை அறிவியல் என்றாலும்
சிதறும் துளிப் பட்டு குளிர் சூழ்ந்து
நினைவினில் அவள் மட்டும் வரும்
காதலும் அறிவியலா

இரசனைகளும் ரசாயணங்களும்
சங்கமித்தல் தான் காதலா

உங்களுள் மெல்லியதாய் படர்ந்திருக்கும்
காதலை கேட்டுச் சொல்லுங்களேன்…

91