சீனதேசத்து வானவளியிலே
சீக்குப்பரப்பியைச் சிதறியதாரோ?
ஊகான்மாகாண உயிர்வளிதனிலே
உயிர்க்கொல்லியை உதறியதாரோ?

வேகமாக வளர்ந்துவிட்டோம்
விஞ்ஞான அறிவினிலென்ற
மோகத்தில் நாங்களெல்லாம்
மூழ்கித் திளைத்திருந்தோம்

காற்றினில் நோய்பரப்பி
நூற்றுக்கணக்கில் உயிர்குடிக்கும்
கரோனோவே உன்முன்னால்
கர்வத்தை உடைத்தெரிந்தோம்

நாசிக் காற்றில்
நச்சைக் கலக்கும்முன்
யோசித்துப் பார்த்தாயா
ஒற்றை நிமிடம்

முந்நீர்சூழு் பூமிக்கே
முகக்கவசம் தைப்பதற்கு
மண்ணில் இல்லைஎந்த
மலிவுவிலை கடையும்

கருவில் இருப்பதுமுதல்
கல்லறைக்கு இருப்பதுவரை
நரபலி கேட்கிறாயே
நல்லதா உனக்கு?

மாதக் கணக்காக
மரணம் உண்கிறாயே
மானிடகுலத்தோடு அப்படி
என்னதான் பிணக்கு?

அஃறிணையின் கருப்பையான
அமேசான் எரிந்தபோது
அமைதி காத்தற்கான
அகிம்சை நிந்தனையா?

ஆஸ்திரேலியக் காட்டுத்தீயில்
கங்காரு கருகியபோது
கண்திறந்தும் வாய்ப்பொத்தியதற்கு
கண்டன தண்டனையா?

புரிகிறது எனக்குப்
புரிகிறது உன்புலம்பல்கள்
எனக்குப் புரிகிறது;
விழுகிறது காதில்

விழுகிறது பிரிவினை
எதற்கு உயிர்களில்
எனும்உன் சரிநிகர்
சாசனம் விழுகிறது

உலகின் நுரையீரல்
உலையில் கொதித்தபோது
கிளைக்கூடு எறிந்துபோன
கிளியின்கதறல் கேட்டதா?

முட்டையுடைத்து வருமுன்னே
மொத்தவாழ்வும் முடிந்துபோன
தட்டான்குஞ்சுக் கூட்டங்களின்
தவிப்புக்குரல் கேட்டதா?

நல்லா வாழலாமென
நள்ளிரவில் கணவுகண்ட
உள்ளான் குருவிகளின்
ஒப்பாரியைக் கேட்கவில்லை

தொங்கும் கூட்டினிலே
தூக்கத்திலேயே எரிந்துபோன
தூக்காணாங்குருவி கூட்டங்களை
துக்கம்விசாரிக்க யாருமில்ல

மகரந்தம் சேராமலே
மரணித்த மலர்கள்
கதிரவன் தீண்டாமலே
கருகிய முகைகள்

புகலிடம் தேடித்தேடி
புலம்பிய புலிகள்
எலும்பும் மீதியின்றி
எறிந்துபோன குயில்கள்

இவைகளின் சாபம்தான்
இன்றைய ஆபத்து
கல்மண் அனைத்திற்கும்
காழ்ப்புணர்ச்சி பொதுச்சொத்து

அமேசான் அழிந்தற்கு
அறிவித்தோமா அவசரநிலை
ஆஸ்திரேலியா கருகியதற்கு
கண்டறிந்தோமா கண்ணாடிவலை

அஃறிணைக்கு ஒன்றென்றால்
அடுத்தநொடியே மறக்கிறோம்
ஆறறிவிற்கு ஒன்றென்றால்
ஆத்தாடி குதிக்கிறோம்

பாம்பால் பரவியதென
பண்டிதர்கள் சொல்கிறார்கள்
வௌவாலால்தான் வந்ததென
வல்லுனர்கள் சொல்லகிறார்கள்

ஒன்றைமட்டும் ஒழுங்காய்
இன்றுமுதல் புரிந்துகொள்
என்றும்அழியா வரியாக
இதயஏட்டில் எழுதிக்கொள்

மானுடம் வாழவேண்டுமெனிலும்
அஃறிணை வேண்டும்
மானுடம் சாகவேண்டுமெனிலும்
அஃறிணைதான் வேண்டும்

நளிர்தரும் நிலா
நட்சத்திரம் மேகம்
அனைத்தும் இருந்தால்தான்
ஆகாயம் அழகு

நிற்பதுவும் நடப்பதுவும்
பறப்பதுவும் இருந்தால்தான்
நிற்காது பூமியென
நீநெஞ்சில் எழுது

உயிர்களில் என்ன
சின்னஉயிர் பெரியஉயிர்
மயிர்களில் என்ன
நீளமயிர் குட்டைமயிர்

கரோனோவின் தாண்டவத்திற்கு
கைபிசைந்துநிற்கும் மானிடமே
கழுத்துநெரிக்க அணிந்திக்கும்உன்
கர்வமாலைகளை அறுத்தெறி

அதுஅது அதன்கையால்
எண்சாண் அளவெனும்
அவ்வையின் அறிவுரையை
அவசியமாய்ப் படித்தறி

கானுயிர் காக்கவும்
காடுகள் வார்க்கவும்
கடைசியொரு வாயப்பைக்
கைகளில் தரவேண்டும்

கதியிழந்த மனிதர்கூட்டம்
கண்கலங்கி வேண்டுகிறோம்
கண்டிப்பாகக் கரோனோவே எங்கள்
கருணைமனுவைப் பெறவேண்டும்

நீண்டதூரப் பயணத்திற்கு
நீர்தேவையெனும் ஞானத்தை
யாரோஒருவர் நீட்டும்பாணம்
ஓங்கிஅறைக்க உணர்கிறோம்

தண்டனையின் வீரியம்
புரிந்திடும் போதுதான்
மன்னிப்பெனும் வார்த்தையின்
மகத்துவம் அறிகிறோம்

நினக்கும் எமக்கும்
வித்தியாசம் வேண்டும்
நிகழ்த்தியத் தவறுகளை
நிழலாக மறந்திடு

நிர்பயா வழக்கைப்போல
நீண்டுகொண்டே போகாமல்
சொற்ப உயிர்களைச்
சுவைத்ததோடு அடங்கிடு

–  விமுகா
கடலூர்

3