கழற்ற முடியவில்லை…
அந்த காற்றுப் புக முடியா
முகமூடிகளை…கழற்ற முடியவில்லை…

மேலாளர் வசை எதிரே
வலுக்கட்டாயப் புன்னகையில்..
கூட்டத்தில் மறைந்து
சிலரை கடக்கும் வேகத்தில்…

விஷேச விருந்துகளில்
உதிர்க்கும் உயிரற்ற  சிரிப்பில்…
நடிப்பென தெரிந்த நட்பு சொல்லும் கதையில்..

வேண்டாதப்  பேச்சுக்களை
வேறு வழியின்றி கேட்கும் செவியில்..
எதிர்த்துப் பேச இயலாத நாவில்..

காறி உமிழ்ந்திட தோன்றும்
உறவுகள் நடுவில்..
அறைந்திடத் துடிக்கும்
கைகளின் விரலில்…

இறுக்கி அணிந்திருக்கும் முகமூடிகளை கழற்ற முடியவில்லை…

நம் சுயத்தை புதைத்து
பூசிக்கொள்ளும் ஒப்பனைகளை எப்பாடு பட்டும் கழற்ற முடியவில்லை…

ஆம்,
கழற்ற முடியவில்லை…
அந்த காற்றுக் கூட புக முடியா
கடின முகமூடிகளை
கழற்ற முடியவில்லை…

— நா. சுமித்ரா தேவி
தேவகோட்டை.

3