தண்டவாளங்களில் குவியும் சகதியோடு உருண்டோடும்
வீட்டு திண்ணைக்கடியில் மடிந்து கிடக்கும்
தோட்டத்தின் மணலரித்து புழு அண்டியிருக்கும்

வீதியிலே மூட்டைக்கட்டி முடித்தவிழ்க்க
மூக்கை கவ்வும் சீராட்டின கைகளையே
வாய்பொத்தி மூக்குப்பொத்தி
கையாற அணைக்கச்சொல்லும்

பள்ளிவாசலையும் பார்த்திருக்காது
பகிரங்கத்துடன் பயந்து பயந்து
சாவோடு சண்டை போட்டிருக்கும்

அள்ளி அணைத்தவனே
அங்கங்களை கூறுப்போடுவதை
பொறுக்கச்சொல்லி போராடச்செய்யும்
காய்கறி வெட்டவும்
கூர்முனையை பார்த்திருக்காது அருவாளுக்கும் ஆள்வெட்டி கத்திக்கும்
காவு போயிருக்கும்

அந்த இடங்களையே சுத்தி சுழற்றி
வேட்டையாடிருக்கும் ஒரு கூட்டம்
துருப்புடித்த கம்பியினை வைத்து விளையாடிருக்கும்
ரத்த கீறல்களாகவே சதையெல்லாம் நிறைந்திருக்கும்
நாவறண்டும் தவித்திருக்கும்

பள்ளிக்காலத்திலும் பருவகாலத்திலுமாய்
சீண்டலிலே நொந்துபோய்
முதிர்வடைந்து வளர்ந்துவருவாளே

சீறி எழுபவளை சீர்குலைத்து சிதைக்க நினைக்கும் வேட்டை மிருகத்தினை வேட்டையாட ஒரு நியதி பிறக்கும்
அந்நாள் வரையில் போராடுவோம்…

 

–ஸ்ருதி கல்யாணகுமார்
சென்னை

9